முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி
மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
டாக்டர் கலைஞரின் நல்லாசியுடன், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி அன்று பொறுப்பேற்றவுடன், ‘எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம்” என்ற உயரிய நோக்கத்தோடு தமிழக மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெரும் வகையில் 5 முத்தான திட்டங்களுக்கு கையெழுத்திட்டு அரசாணை பிறப்பித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் தற்போது உள்ள நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரூ.4,000 உதவி தொகை, பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 விலை குறைப்பு, மகளிர், பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் பயன்பெறும் வகையில் சாதாரண கட்டணம், நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கொரோனா நோய் சிகிச்சை மற்றும் மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி இந்திய ஆட்சிப்பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலர் மூலம் பொதுமக்களின் பிரச்சினைகள் நிறைவேற்ற ப்படுவதற்கான அரசாணைகள் போன்ற 5 முத்தான திட்டங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்டு அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்;” திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஜூன் 3ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்.
அந்நிகழ்வினை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அறிவுரையின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பொறுப்பு அலுவலர் (உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்) செ.சாந்தி மற்றும் அலுவலர்கள் கொண்ட குழு மூலம் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் பெறப்பட்ட 9,293 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 603 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு 7,688 மனுக்கள் நிலுவையிலும், 1,002 மனுக்கள் மறுபரிசீலனை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.செல்லக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில் முதற்கட்டமாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் 363 நபர்களுக்கு ரூ.5.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், வருவாய் துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா, பல்வேறு உதவி தொகைகள், இறப்பு மற்றும் சாதி சான்றிதழ்கள் மற்றும் நத்தம் சிட்டா நகல் என ரூ.3.37 லட்சம் மதிப்பீட்டில் 234 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பசுமை வீடு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கான்கிரீட் கால்வாய், சாலைகள், கிணறு, சுற்று சுவர், கழிவுநீர்க் கால்வாய், தெரு விளக்குகள், கதிர் அடிக்கும் களம், குடிநீர் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி என உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5.47 கோடி மதிப்பீட்டில், 84 பணிகளுக்கான ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.17.67 லட்சம் மதிப்பீட்டில் 2 தனியார் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் பயனடைந்த தளி ஊராட்சி ஒன்றியம், பெட்டமுகிளாம் மலைகிராம ஊராட்சியைச் சேர்ந்த முத்துராஜின் மனைவி மாதேவி தெரிவித்ததாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம் கடைகோடி மலைகிராமமான பெட்டமுகிளாம் கிராமத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். நான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு சொந்தமாக வீடு கட்ட வசதியில்லாத காரணத்தால் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். மழைக்காலங்களில் குடியிருக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். நான் ஏற்கனவே பலமுறை பசுமை வீடு கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அய்யா அவர்கள் ஏற்கனவே ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அறிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில் நான் பசுமை வீடு கோரி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தேன். தற்போது எனக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் பசுமை வீடு கட்ட பணி ஆணை வழங்கியுள்ளார்கள். என் குடும்பத்தாருக்கு சொந்த வீடு கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை பெற்று பயனடைந்த, கிருஷ்ணகிரி வட்டம், ராமசந்திரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி ராணி தெரிவித்ததாவது:
நான் வயது மூப்பு காரணத்தால் வேலைக்கு செல்ல முடியவில்லை. நான் ஏற்கனவே, முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளித்திருந்தேன். ஆனால் என்னுடைய மனுவிற்கு எந்த பதிலும் வழங்கவில்லை. தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அய்யா அவர்கள் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை உருவாக்கி அதற்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அந்த திட்டத்தில், நான் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளித்திருந்தேன். எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளார்கள். எனக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி வாழ்கையில் ஒளிஏற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், வீட்டு மனை பட்டா பெற்ற, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அகரம் ஊராட்சி குடிமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி வெண்ணிலா தெரிவித்ததாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அகரம் ஊராட்சி, குடிமேனஹள்ளி கிராமத்தில் எனது கணவர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமணை எதுவும் இல்லை. தற்போதுவரை வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறது. வீட்டு வாடகை செலுத்துவதற்கு கூட சிரமமாக உள்ளது. ஏற்கனவே, நான் வீட்டுமனை கேட்டு மனு அளித்திருந்தேன். எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள். நான் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில் வீட்டுமணை பட்டா கேட்டு மனு அளித்திருந்தேன். தற்போது என்னுடைய மனுவை ஏற்று எனக்கு வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளார்கள். எங்களை போன்ற ஏழை எளிய மகளிர் நலன் காக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக உள்ளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளார்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப பள்ளிக்கு சுற்றுசுவர் கட்ட பணியாணை பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழ்மத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கர்ராஜ் தெரிவித்ததாவது:
நான் சமூக ஆர்வலராக உள்ளேன். எங்கள் ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 100 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகில் தார்சாலை உள்ள நிலையில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. அரசு ஆரம்ப பள்ளிக்கு சுற்றுச்சுவர் இதுவரை இல்லாமல் இருந்தது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம் என்ற திட்டத்தை தொடங்கினார்கள். எனவே, பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர மனு அளித்திருந்தேன். தற்போது பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (2021-22 ஆண்டு) சுற்றுச்சுவர் கட்ட பணியானை வழங்கி உள்ளார்கள்.
குழந்தைகளின் நலன் காக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொகுப்பு:
தே.ராம்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.