கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா பொதுமுடக்கத்தால் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா மூடப்பட்டு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆயினும், பூங்காவில் உள்ள முதலைகள், பாம்புகள், மான்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் மற்றும் பறவைகளைப் பராமரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக கோவை உயிரியல் பூங்காவில் தினமும் 2 முறை கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது, விலங்கினங்களுக்கு வழங் கப்படும் உணவு, தொற்றுப் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பூங்கா பராமரிப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 38 ஆவது வார்டு பீளமேடு பயணியர் மில் சாலையில் உள்ள சுகாதார அலுவலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு, சரவணம்பட்டி சுகாதார பிரிவு அலுவலக வளாகத்தில் 28 ஆவது வார்டு முதல் 31 வார்டு வரை உள்ள பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று பரிசோதனை மேற்கொண்ட விவரங்களைக் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, உடையார்பாளையம் சாலை பகுதி, அப்பநாயக்கன்பாளையம் கலைஞர் நகர் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், வடக்கு மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலர் மேனகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.