பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 1) சென்னையில் தொடங்கி வைத்து,
இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்டுள்ள இலச்சினையையும் வெளியிட்டார். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.
ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி
அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Roboticsபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
பள்ளிகளில் ஆலோசனை மையம்
இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.
முன்னாள் மாணவர் களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும்(Mentoring)) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை முதலவ்ர் துவக்கி வைத்தபோது, கோவை மாவட்டத்தில் உள்ள 83 அரசு உயர் நிலைப்பள்ளிகளிலும், 22 அரசு நிதியுதவி பெறும் உயர் நிலைப்பள்ளிகளிலும், 97 தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு நேரலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
மேலும் 113 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 41 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும், 3 மத்திய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 306 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் என மொத்தம் 665 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு நேரலையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி அவர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ‘நான் முதல்வன்’ திட்டத்தை கொண்டு வந்த முதல்வருக்கு கோவை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
வெளியீடு
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர்.