கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் இணைந்து நடத்தும் Girl up fembots சார்பாக கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
யுனைடெட் நேஷன் பவுண்டேஷனின் கிளை அமைப்பாக கோவையை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் இந்த தன்னார்வ அமைப்பு பல்வேறு சமுதாயம் சார்ந்த பணிகளை செய்து வருகிறது.
சுமார் 200 கல்லூரி மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்து இதனை நிர்வகிக்கின்றனர்.
இந்த அமைப்பு சார்பில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பின் துணை தலைவர் தீக்ஷா, செயலாளர் அதுரக்ஷனா, நிகழ்ச்சி இயக்குனர் ஸ்ரீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், உறுப்பினர்கள் அக்ஷயா, ஹரிஹரன்,கேசவ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிர்வாகிகள் கூறுகையில், பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு சமூக பணிகளை நடத்தி வருவதாகவும்,குறிப்பாக ஆனைகட்டி போன்ற மலைவாழ் கிராம பெண்களுக்கு நாப்கின் வழங்குவது, கல்வி குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.