கொரோனா 3வது அலை தாக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது எப்போது தாக்கும்! அதன் தீவிரம் எவ்வாறு இருக்கும்? என்பதை நாம் இப்போது கூற முடியாது.
மக்கள் கொரோனா பாதிப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுவதன் மூலமும் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலமும் 3வது அலையின் தாக்கத்தை குறைக்க முடியும் என்று அனுராக் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வடிவத்தில் சிறிய அல்லது பெரிய அளவில் ஏற்படும் மாற்றத்தையே உருமாற்றம் என உயிரி மருத்துவ மரபியல் நிறுவன இயக்குனர் டாக்டர் சுமித்ரா தாஸ் கூறியிருக்கிறார்.
கொரோனா 100 முதல் 1000 உருமாற்றத்திற்கு உள்ளாகும். அவ்வாறு உருமாறும் கொரோனா வேகமாக பரவக்கூடிய வகையைச் சார்ந்ததா அல்லது கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமா? என்பது தான் கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவலை தடுக்க மூன்றடுக்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்று ஜோத்பூர் தேசிய தொற்று அல்லாத நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அருண் சர்மா கூறியிருக்கிறார்.
கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருப்பதால் அதை எந்த உருமாறிய வகை என்பதை கண்டறிய விஞ்ஞானிகளுக்கு போதிய அவகாசம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக நாம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
மூன்றடுக்கு முகக்கவசத்தை அணிவதோடு, கைகளை தொடர்ச்சியாக சுத்தம் செய்வதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதும் மிகவும் அவசியம் ஆகும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதன் மூலமும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த நடைமுறைகள் வைரஸ் தொற்று பரவலை துண்டிக்க உதவுகின்றன. ஆகவே நோய் தொற்று வருவதற்கு முன்பே நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பின் பற்றுவோம்.
கொரோனா நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்வோம். வரும் நாட்களில் மூன்றாவது அலை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று மருத்துவ அறிவியல் வல்லுனர்கள் எச்சரிப்பதால் மூன்றடுக்கு முகக்கவசத்தை கட்டாயம் அணிவோம்.