உயிருக்கு போராடுபவர்களை ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கவும் காத்திருக்க வேண்டிய நிலை. உயிர் பிரிந்த பிறகும் உடலை எரிக்க காத்திருக்க வேண்டிய நிலை. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல்களை பிணவறைக்குள் வைக்க இடம் இல்லாமல் திறந்த வெளியில் ஸ்டெச்சரில் போட்டுச் சென்றுள்ளார்கள்.
கொட்டிய மழை நேரத்தில் அந்த உடல்கள் அனாதையாக கிடந்தன. இதன் மூலம் தொற்றுகள் எவ்வளவு வேகமாக பரவும் என்பது தெரிந்தும் அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள். திருப்பதியில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 பேர் இறந்து போன சம்பவத்திற்கு தமிழகமும், கர்நாடகாவும் ஆக்சிஜன் வழங்காததுதான் காரணம் என்று அந்த மாநில முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு மிகப்பெரிய ஆபத்துக்குள் சிக்கி கொண்டிருக்கிறது.
இனியும் யோசிப்பு, சமாளிப்பு என்பதெல்லாம் கை கொடுக்காது. கொரோனா கட்டுப்படுகிறது என்று சொன்னாலும் உயிர் இழப்புகள் அதிகரித்து வருவது கூடுதலான கவலையை அளித்துள்ளது.
எனவே மருத்துவ அவசர நிலை என்ற அறிவுரையை கோர்ட்டு மட்டும் நினைவுபடுத்தவில்லை. மக்களும் நினைக்க தொடங்கியுள்ளனர். போர்க்களத்தை போலவே மருந்துவ அவசர நிலையும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்பது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் மத்திய&மாநில அரசுகள் ஒன்றிணைந்து நாடு முழுவதும் கொரோனாவை வீழ்த்துவதற்கான மிகப்பெரிய நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது.