கோவை மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் வாசுகி, பொருளாளர் மருத்துவர் ஓ.என். பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தனர்.
12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களை தூக்கிப் பாயும் நிலையில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இச்சிலையை நிறுவுதல் மற்றும் பராமரித்தலுக்கான பொறுப்பையும் செலவையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜூலை 29 ஆம் தேதி உலகப் புலிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது பொருத்தமாக அமைந்துள்ளது.



