முதல்வர் வருகின்ற 11ம் தேதி அன்று ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைக்க உள்ளதைத் தொடர்ந்து, ஞாயிறு அன்று வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார்.
அமைச்சர் கூறிய தாவது: வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், புதிய இரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் விதைகள், ஒட்டு இரக பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் பிறவகை மரக்கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற் பனை, உயர் இரக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் மற்றும் இவை குறித்த கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு ஜூன் 11 மற்றும் 12ல் நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், பட்டு வளர்ச்சித்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால் நடை அறிவியல் பல் கலைக்கழகம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றது. உழவர்கள் சார்ந்த அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள இக்கண்காட்சி வாய்ப்பாக அமையும்.
மேலும் தொழில்நுட்ப வல்லுநர்கள், அனுபவமிக்க வேளாண் பெருமக்கள், ஏற்றுமதியாளர்கள், உயர் அலுவலர்கள், பேராசிரியர்கள் 25 தலைப்புகளின் கீழ் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை வழங்கும் வகையில், 2 நாட்கள் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
விவசாயிகள் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிரக்கூடிய வாய்ப்பு இக்கருத்தரங்கில் உள்ளது. இதனை வேளாண் பெருமக்களும், பொது மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, விவசாய பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி களை வழங்க உள்ளார்கள்.
இவ்வாறு அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திர குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.