ஸ்வீடன் நாட்டில் உள்ள STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE
(சிப்ரி) என்ற உலக அமைதி தொடர்பான ஆராய்ச்சி மையம் அணுகுண்டுகள் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இந்தியா ஒரே நேரத்தில் பல அணுகுண்டுகளை எடுத்துச் செல்லக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சீனா 100 புது அணுகுண்டுகளை உருவாக்கியுள்ளதோடு அதனிடம் உள்ள அணுகுண்டுகள் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.
9 அணுஆயுத நாடுகளிடம் 12 ஆயிரத்து 241 அணுகுண்டுகள் இருக்கின்றன. இதில் 3 ஆயிரத்து 912 குண்டுகள் ஏவுகணைகளிலும் விமானங்களிலும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் மிகப்பெரும்பாலானவை அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் உள்ளன.
பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளும் அணுஆயுத வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. ரஷ்யா &- உக்ரைன், ஈரான் &- இஸ்ரேல், இந்தியா – பாகிஸ்தான் என அவ்வப்போது மோதல்கள் நடக்கும் நிலையில் இத்தகவல்களை சிப்ரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அணு ஆயுத தரவுகள் ஒன்றும் பெருமைபடக்கூடிய செய்தியோ இனிப்பான செய்தியோ அல்ல. ஆபத்தான அணுஆயுத போட்டி உலக நாடுகளிடையே அதிகரித்து இருப்பது ஒருபுறம் அச்சமூட்டுகிறது.
மறுபுறம் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பலவீனமடைந்திருப்பது உலக அமைதியை விரும்பும் நாடுகளுக்கு கவலை தரக்கூடியதாக உள்ளது.
ஈரான் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை அந்நாடு மறுக்கவில்லை. ஆனால் அணு குண்டுகள் தங்களிடம் இல்லை என்று கூறுகிறது. ஈரான் மறுத்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளோ ஈரான் அணுகுண்டை உருவாக்க நெருங்கிவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன.
அதன் பின்னணியில் தான் அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதாகக் கூறி, அந்த நாட்டின்மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. 9 மூத்த அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் தான் ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கலாம், அதனை இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்கேதம் எழுந்துள்ளது.
அணு ஆயுதங்களை பல நாடுகள் போட்டி போட்டு குவித்து வரும் வேளையில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற திட்டமிட்டு இருப்பது, அணு ஆயுதப் போருக்கு வித்திடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!