ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாள் திருக்கோயிலில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநி லையத்துறை) மரு.க.மணிவாசன், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் கோயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 20.12.2024 அன்று ஈரோடு மாவட்டத் திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்தபோது கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் திருக்கோயில் பக்தர்களுக்கான அடிப்படை மேம்பாட்டு வசதிகள் ரூ.7 கோடி மதிப்பில் அமைத்துத் தரப்படும் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகளான முடிக் காணிக்கை மண்டபம், பக்தர்கள் உடை மாற்றும் அறை மேம்படுத்துதல் மற்றும் காவேரி படித்துறையில் பக்தர்கள் விட்டுச்செல்லும் உடைகளை அகற்றுவதற்கு துணி சேகரிக்கும் இடம், தேவையான தூய்மைப்பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவிலைச் சுற்றி தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்துக்கொள்ள தேவையான மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்திடவும், இக்கோவிலின் தல விருச்சமான வன்னி மரத்தினை திசு வளர்ப்பு மூலம் உற்பத்தி செய்து வளர்த்திடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வடிவமைப்பு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுகுமார், மண்டல பொறியாளர் சந்திரசேகர், மண்டல உதவி செயற்பொறியாளர் கானீஸ்வரி, செயல் அலுவலர் திருஞான சம்மந்தம் உடனிருந்தனர்.