fbpx
Homeதலையங்கம்இந்தி திணிப்பு - ஒன்றிய அரசின் நிஜமுகம் அம்பலம்!

இந்தி திணிப்பு – ஒன்றிய அரசின் நிஜமுகம் அம்பலம்!

நாடு விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே தமிழ்நாடு, இந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்துள்ளது.
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் வீரம் செறிந்த ஜனநாயக அறவழிப் போரை நடத்தி இருக்கின்றனர். நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் உயிரத் தியாகம் செய்துள்ளனர்.
ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக இந்தி மொழி திணிக்கப்பட்டது அந்தக் காலம்.

தற்போது, புதிய கல்வி கொள்கை,- மும்மொழிக் கொள்கை ஆகியவற்றின் பெயரால் தமிழ்நாட்டிலும் இந்தி மொழியைத் திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்பது இங்குள்ள அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.
வட இந்திய மாநிலங்களில் இப்படி இந்தி மொழி திணிக்கப்பட்டதால் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில மக்களின் தாய்மொழி அழிக்கப்பட்டு அந்த இடத்தை இந்தி கைப்பற்றி இருக்கிறது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கல்வியாளர்கள் பட்டியலிட்டு அம்பலப்படுத்தி இருந்தனர். ஆனாலும் பாஜக தரப்பில், 3-வது மொழியாக இந்தியை படிக்கலாமே என்றனர்.

இதற்கும் இந்தி படிக்கவே கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை; 75 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இந்தி பிரசார சபா இயங்குகிறதே எனவும் தமிழ்நாட்டு கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டி வந்தன.
தற்போது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் அச்சமும் எதிர்ப்பும் நியாயம்தான் என்பதை மகாராஷ்டிரா மாநிலச் செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.

இம்மாநிலத்தில், ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை-, மும்மொழிக் கொள்கையின் கீழ் 3-வது மொழியாக இந்தி மொழி பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சி தரும் செய்தி.
தமிழ்நாட்டிலும் இந்தி மொழியை இதே பாணியில் திணித்து கட்டாயமாக்கலாம் என்ற ஒன்றிய அரசின் உண்மை முகம் மகாராஷ்டிரா மூலம் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பது இந்தி மொழி திணிப்புக்கான கருவிதான் என்கிற தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு நியாயமானது என்பதை உறுதி செய்துள்ளது மகாராஷ்டிரா.
அதனால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கூட திருவள்ளூர் விழாவில் பேசியபோது ஒன்றிய அரசின் போக்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது என்றும் முழக்கமிட்டுள்ளார்.

இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்கும் பாதுகாவலராம் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராகப் பெற்றிருக்கும் தமிழர்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் தான் என்றால் மிகையாகாது!

படிக்க வேண்டும்

spot_img