தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெங்கு மரஹாடா வாக்குச்சாவடி மையம், கல்லம்பாளையம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சாய்வுதளம் ஆகியவை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தேர்தல் நாளான ஏப்ரல் 23 இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களிக்க செல்லும் போது, வாக்காளர்கள் தங் களது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும்.
இதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அட்டைகளான ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் (MGNREGA) பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று வாக்களிக்க வேண்டும் எனவும், தேர்தல் நடைபெறும் நாளில் அனைவரும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், தெங்குமரஹாடா கிராமம், கல்லம்பாளயம் மற்றும் அல்லிமாயார் பகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி, நீலா செல்பி பாய்ண்ட்-இல் புகைப்படம் எடுத்துக்கொண்டும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டுமென்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கல்லம்பாளையம், அல்லிமாயார் ஆற்றில் பரிசலில் கடக்கும் போது, வாக்களிப்பதன் அவசியம், அனைவரும் வாக்களிப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, துணை இயக்குநர்கள் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யாதர், கௌதம், (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்), பொறுப்பு அலுவலர் (தேர்தல் விழிப்புணர்வு பணிகள்) /ஆவின் பொது மேலாளர் ராஜேஷ்குமார், கோத்தகிரி வட்டாட்சியர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



