இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்கிழமை அரக்கோணம் மின்னல் ஊராட்சியிலும், மூன்றாம் வார செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர் கூட்ட அரங்கம் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் 323க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 273 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார்.
இதில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை கோரி 57 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 36 நபர்களும் மற்றும் சக்கர நாற்காலி கோரி 27 நபர்களும் விண்ணப்பித்தார்கள். மேலும் காதொலி கருவி 13 நபர்களுக்கும், நவீன செயற்கை அவயம் 15 நபர்களுக்கும் மற்றும் UDID அட்டை 147 நபர்களுக்கும் பதிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உதவும் நல்இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.