fbpx
Homeதலையங்கம்தமிழ்நாடு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி; ஆனால்…?

தமிழ்நாடு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி; ஆனால்…?

காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28-ம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும்.

ஆனால்,78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. ஆனால், ஏதோ சாக்குபோக்கு சொல்லி, தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என கர்நாடகா மறுத்து வருகிறது.

இப்படி இருக்கையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 99வது கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், “கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கர்நாடகா உரிய நீரை திறக்கவில்லை. பிப்ரவரி முதல் மே வரையிலான நீரை உரிய முறையில் திறக்கவில்லை. அத்துடன், இந்த ஆண்டு கர்நாடகாவில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

ஆனாலும், தண்ணீர் திறக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் செயல். ஆகவே, தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள்” என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், கர்நாடகாவில் மழை இல்லை; குடிநீருக்கே தண்ணீர் போதாது என்கிற பழைய பல்லவியையே திரும்ப திரும்பப் பாடியது.

இது தரப்பு வாதங்களை கேட்ட ஒழுங்காற்றுக்குழு, தமிழ்நாட்டிற்கு இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள் தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

அதேபோல தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி தான். தற்போது நல்ல மழை பெய்து, கர்நாடக அணைகளில் போதுமான நீர்இருப்பு உள்ள நிலையில் ஒழுங்காற்றுக்கு பரிந்துரைப்படி காவிரியில் தினமும் 1 டிஎம்சி தண்ணீரை முழுமையான அளவில் 20 நாட்களுக்கு திறந்து விட்டால் தான் அந்த மகிழ்ச்சி நீடிக்கும்-!

படிக்க வேண்டும்

spot_img