விஜய் பிரசாரத்தின்போது கரூரில் பலியான 41 பேர் உடல்களை எப்படி 4 மணி நேரத்தில் போஸ்ட் மார்டம் பண்ண முடியும்?. இது கரூர் பிரச்னையில் ஏதோ மர்மம் இருப்பது போன்ற சந்தேகக் கேள்வியாக திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டது.
முதலில் 4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடக்கவில்லை. 14 மணி நேரம் நடைபெற்றது. இதற்கு ஆதாரங்கள் இருந்தாலும் திரும்ப திரும்ப இதையே கேள்வியாக எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
ஒரு சில மாதங்களுக்கு முன், குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தில் எப்படி போஸ்மார்டம் நடைபெற்றது என்பதை பார்க்க வேண்டும். அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 229 பேர். அத்தனை பேரின் உடல்களையும் வெறும் 13 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்து முடித்தார்கள் அங்குள்ள டாக்டர்கள். இதற்கு அனைத்து தேசிய ஊடகங்கள் மற்றும் வலைதள பதிவுகள் சாட்சியாக உள்ளது.
கரூரில் நடந்த சம்பவத்தில் முழு உடல்கள் கிடைத்தன. ஆனால் குஜராத் சம்பவத்தில் உடல்கள் நசுங்கி, சிதைந்து, எரிந்து, உருக்குலைந்த நிலையில்தான் கிடைக்கப் பெற்றன. வெளிபார்வைக்கு எல்லோரும் நினைப்பது என்னவென்றால் முழு உடலை பிரேத பரிசோதனை பண்ணுவதற்கு காலதாமதம் ஆகும். குறைந்த உடல்பாகங்களில் சீக்கிரமாக செய்து விடலாம் என்று நினைக்கிறோம்.
அப்படி கிடையாது. முழு உடல்களை பிரேத பரிசோதனை செய்வதை விட, சிதைந்து போன உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு அதிக நேரம் ஆகும் என்பதே மருத்துவ ரீதியான உண்மை.
பொதுவாக நெரிசல் மரணங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ? அங்கிருக்கும் மக்களின் மனதை ஆற்றுப்படுத்துவதற்காக, புதுக்கோபம் உண்டாகி விடக்கூடாது என்பதற்காக, அவர்களை மேலும் போஸ்ட்மார்டம் என்ற பெயரில் தாமதப்படுத்தி துக்கப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உடல்களை ஒப்படைப்பார்கள்.
கும்பல் மரணங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ? அங்கெல்லாம் இந்த நடைமுறை பின்பற்றப்படும். இதைத்தான் குஜராத்திலும் செய்திருக்கிறார்கள். கரூரிலும் செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உரிய விளக்கத்தை அளித்துள்ளார். `பிற மாவட்டங்களில் இருந்து 22 உடற்கூராய்வு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். மொத்தம் 25 மருத்துவர்கள், உடற்கூராய்வு பணியை 5 டேபிள்களில் செய்தனர்.
3-,4 மணி நேரத்தில் உடற்கூராய்வு செய்து முடித்ததைப் போன்ற தவறான செய்திகள் பரவுகிறது. உடற்கூராய்வு 14 மணி நேரங்கள் நடந்துள்ளது` என்ற அவரது விளக்கத்திற்கு பிறகும் இதில் அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.
மருத்துவ கட்டமைப்பில் மிகவும் பின்தங்கி உள்ள குஜராத்திலேயே இது சாத்தியம் என்றால், தமிழ்நாட்டில் ஏன் சாத்தியப்படாது? இது ஒரு அடிப்படையான உண்மை. இனியும் இந்த விவகாரத்தில் சர்ச்சைகளை கிளப்புவது தமிழ்நாட்டு மருத்துவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுவதற்குச் சமமாகும்.
தேவையில்லாத சர்ச்சைகளால் யாருக்கு என்ன லாபம்? குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பிரேத பரிசோதனைகளை ஒப்பிட்டு பார்த்து அரசியல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே சரியாக இருக்கும்!