fbpx
Homeபிற செய்திகள்அமித்ஷா அவர்களே… பதில் சொல்லுங்கள்!

அமித்ஷா அவர்களே… பதில் சொல்லுங்கள்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்தால் தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறையும் அபாயம் உள்ளது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.


இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள்தொகை கணக்கெடுப்பை தாமதமாக நடத்துவது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை ஒன்றும் தற்செயலானது இல்லை என்று விமர்சித்தார். தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


ஆனால், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்குகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். 2027ல் மக்களவைக்கான தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அப்போது எதிர்ப்போம் என்று மழுப்பலாக கூறி, நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்ட ஆபத்தை கடந்து போய் இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.


இந்த நிலையில் ஒருநாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தார். இதையொட்டி, அமித்ஷாவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மறுவரையறை தொடர்பான கேள்விகளை முன்வைத்தனர்.


திமுக எம்.பி. தயாநிதி மாறன், தமிழகத்தின் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்ற வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 விழுக்காட்டில் மாற்றம் இருக்காது என்ற உறுதியை சட்டப்படி அளிக்க அமித்ஷா தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.


மற்றொரு திமுக எம்.பியான தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் பக்கத்தில், கொரோனா காரணமாக 2021ஆம் ஆண்டு எடுக்க முடியாத மக்கள்தொகை கணக்கெடுப்பை 2023, 2024, 2025ஆம் ஆண்டுகளில் எடுத்திருக்கலாம்.

ஆனால், வேண்டும் என்றே காலம் தாழ்த்தி 2027ஆம் ஆண்டு எடுப்பதன் நோக்கம், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே என்று விமர்சித்தார்.


இதேபோல மாநிலங்களவை திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, மக்கள்தொகையை அடிப்படையாக கொண்டு தொகுதி மறுவரையறை செய்தால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை கூட்டி, எளிமையாக அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சி பெற்றிட பாஜகவின் முயற்சியே இது என்று சந்தேகக் கணை தொடுத்தார்.


திமுக எம்.பிக்களின் கேள்விகளுக்கு மதுரையில் அமித் ஷா பதிலளிப்பார் என்று தமிழ்நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் அது குறித்து வாயைத் திறக்காமலே டெல்லி புறப்பட்டுச் சென்று விட்டார்.


மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க தயாரா? என்பது திமுக எம்.பிக்களின் கேள்வி மட்டுமல்ல, உரிமைகளுக்காக மல்லுக்கட்ட எப்போதும் தயாராக இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியும் அது தான்.


பதில் சொல்லுங்கள், அமித்ஷா அவர்களே!

படிக்க வேண்டும்

spot_img