மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண்ணில் 2002 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இன அழிப்புப் படுகொலை சம்பவங்கள் மனிதகுல வரலாற்றில் மிகக் கொடூரமானதாக கருதப்பட்டது.
இந்தியா தனது 76வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி குஜராத்தில் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, வேறு 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசார், 2 மருத்துவர்கள் உள்பட 11 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
கைதிகளின் தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, ஜூன் மாதம் எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது.
அதில் ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் மன்னிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்களின் தண்டனையை ரத்து செய்யும் முடிவை குஜராத் அரசு எடுத்தது.
2014, ஜனவரி 23 ஆம் தேதி குஜராத் உள்துறை அமைச்சகம், மன்னிப்பு மற்றும் முன்கூட்டிய விடுதலைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளை வெளியிட்டது.
அதில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களின் கும்பல் கொலை மற்றும் கற்பழிப்பு அல்லது கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் 1992 கொள்கையின் கீழ், நீதிமன்ற அனுமதியின்பேரில் வழங்கப்பட்ட மன்னிப்பு, விடுதலை இது என குஜராத் அரசு சப்பைக் காரணத்தை கூறுகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க, குஜராத் அரசின் கமிட்டி எப்படி முடிவு செய்தது என்பது புரியவில்லை.
குஜராத் அரசு அமைத்த குழுவிற்கு அதிகாரம் இருந்தது. ஆனால் கமிட்டி அந்த அதிகாரத்தைக் கண்மூடித்தனமாக பயன்படுத்தியிருக்கக்கூடாது.
கைதியின் நடத்தை எப்படி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குற்றத்தின் தன்மை என்ன என்பதை கமிட்டி பார்த்திருக்க வேண்டும்.
குற்றத்தின் தன்மையை பார்த்திருந்தால், மனசாட்சி உள்ள ஒரு குழு இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்திருக்க முடியும்? சட்டத்தின் சந்துபொந்துகளைத் தேடிச் சென்று விடுதலை செய்ய எப்படி மனசாட்சி இடம் தந்ததோ தெரியவில்லை.
இந்த நிலையில் 11 பேர் விடுதலை குறித்து பில்கிஸ் பானு முதல் முறையாக பேசியதாவது: எனது குடும்பத்தையும் எனது வாழ்க்கையையும் சீரழித்த 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்று நான் கேள்விப்பட்டபோது கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சி என்னை மீண்டும் உலுக்கியது.
இவ்வளவு பெரிய அநீதியான முடிவை எடுப்பதற்கு முன், என் பாதுகாப்பை பற்றி யாரும் விசாரிக்கவில்லை.
குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து இந்த தீர்ப்பை நீக்குங்கள். அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான எனது உரிமையை எனக்குத் திரும்பக் கொடுங்கள். தயவு செய்து நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த 11 கைதிகள் விடுதலை தற்போது நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து கட்சியினரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். ராகுல்காந்தி கடுமையாகவே சாடி இருக்கிறார்.
5மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியைக் கொன்றவர்கள் ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா’வின் போது விடுவிக்கப்பட்டனர்.
‘பெண் சக்தி’ பற்றி பேசுபவர்களால் நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது? பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக் கொண்டு இருக்கிறது
என ராகுல்காந்தி பதிவிட்டு இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டிருக்கிறது. இது நம் இந்திய திருநாட்டின் மாண்பை உலக நாடுகளில் குறைக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநில அரசின் இந்தச் செயல் நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவாலாகும். இக்கொடுஞ்செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்!