நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா அட்டி, வாளவயல், செத்த கொல்லி, சாமியார் காலனி , வாளமூலை, புஞ்சை மூலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன.
இந்த நிலையில் புதன்கிழமை (நேற்று) இரவு வாளவயல் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக குடியிருப்பு பகுதியில் காட்டு யானை தாக்கி பூங்கொடி என்ற பெண் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானையை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கூடலூர் வனக் கோட்ட வன அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கூடலூர் பந்தலூர் தாலுகாவில் கிராம பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுத்து வருவதால், பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
யானை & மனித மோதலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு உரிய நடவடிக்கையை அவசரம் அவசியம் கருதி எடுக்கும். இவ்வாறு அமைச்சர் கா.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில், கோவை விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் வன அதிகாரி அன்வர்தீன், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி, வன மரபியல் கோட்டம் அலுவலர் வித்தியா, ஆனைமலை புலிகள் காப்பகம் சேவியர், டேன் டீ எம்டி சீனிவாசரெட்டி, பொதுமேலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.