fbpx
Homeதலையங்கம்சமூக வலைதளத்தில் போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி!

சமூக வலைதளத்தில் போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி!

மக்களிடையே உண்மைக்கு புறம்பான வதந்திகளை பரப்புவதில் சமூக வலைதளங்கள் முன்னிலை வகிக்கின்றன. இதனால் பல சர்ச்சைகளும், வன்முறைகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த ஒன்றியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே போலியான, தவறான செய்திகள் வெளியிடும் இணையதளங்கள், சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவை முடக்கப்பட்டு வருகின்றன.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகிறது.

சில நேரங்களில் போலிச் செய்திகள் நாட்டு நடப்பையே அசைத்து பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும்.
இந்தநிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.
அதன்படி கடுமையான நடவடிக்கைகளை தொய்வின்றி எடுத்தால் போலி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
கிரிமினல் சட்ட நடவடிக்கை, காலம் தாழ்ந்த முடிவாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது!

படிக்க வேண்டும்

spot_img