கொரோனா வார்டில் பணி புரிவதால் தனிமைப்படுத்திக் கொள்ளும் நர்சுகளிடம் பெற்ற பிள்ளைகள் விவரம் புரியாமல் அம்மா இப்போ எல்லாம் ஏன் என்னை அருகில் படுக்க விடமாட்டேன் என்று அழுவதும், எட்டி நின்று பார்த்துச் செல்லும் தாயிடம், அம்மா! ஒரே ஒரு முறை உன் கையையாவது தொடுகிறேன் என்று உருக்கமாக கூறுவதை பார்க்கும் போதும் மனசு அழுகிறது.
அந்த அளவுக்கு பணியாற்றும் இவர்கள் முன்களப் பணியாளர்கள் அல்ல, நாட்டை காக்கும் வீரர்கள் போல இவர்களும் முன்கள வீரர்கள் தான். ராணுவ வீரர்கள் உயிரை பணயம் வைத்து நாட்டைக் காக்கிறார்கள்.
ஆனால் இவர்களோ கொரோனாவிடம் பிணைக் கைதிகளாக இருந்து நம்மை காக்கிறார்கள்.
இந்த பிடியில் இருந்து எப்போது விடுபடுவோம் என்ற பரிதவிப்பு அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கத்தானே செய்யும்.
ஆனால் கொரோனாவை விட மறுத்து அதை தன்னோடு அழைத்துக்கொள்ளும் மக்களால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் எகிறுகிறது.
இதைப் பார்க்க அவர்கள் மனம் என்ன பாடுபடும்? இதை ஒரு கணமேனும் சிந்திக்கிறோமா? சிந்தித்து இருந்தால் கொரோனா உச்சம் தொட்டதை போல், மதுக் கடைகளில் விற்பனையும் உச்சம் தொட்டு இருப்பதாக பெருமை கொண்டிருப்போமா?-ஒரே நாளில் 428 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.
மூட்டை, மூட்டையாக மது பாட்டில்களை வாங்கிச் செல்வதற்காக முண்டியத்ததை நேரில் பார்த்தோம். எந்தவிதமான முன் எச்சரிக்கையும் இல்லை, முகக்கவசம் இல்லை, சமூக இடைவெளி இல்லை, கொரோனாவைப் பற்றி துளியும் கவலை இல்லை.
அவர்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை. மது பாட்டில்கள் கிடைத்தால் போதும் என்ற ஒரே கவலை தான். திருந்தாத இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை வருந்த வேண்டியதுதான் வரும்.
ஆனால் இவர்களுக்காக தன்னை வருத்திக்கொள்ளும், தனது உயிரையும் இழக்கும் இந்த மாதிரி முன்கள பணியாளர்கள் பரிதாபத்துக்குள்ளானவர்கள்.
14 நாட்கள் ஊரடங்கு அமலாகி இருக்கிறது.
இந்த 14 நாட்களும் பாண்டவர்கள் வனவாசம் போனது போல் ஒவ்வொருவரும் நாட்டில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்குள் வனவாசம் இருந்தால் போதும், கொரோனா வனவாசம் சென்று விடும்.
இதைத்தான் அரசாங்கமும் கொரோனா நோயாளிகளுடன் போராடும் முன்கள பணியாளர்களும் கண்ணீர் மல்க வேண்டுகிறார்கள். இது நம்மை மட்டும் காப்பதற்கு அல்ல. நம்மிடம் இருந்து பிறரும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
நமக்கு ஒருவர் ஆபத்தை விளைவித்தால் சும்மா இருப்போமா? ஆனால் இப்போது என்ன நடக்கிறது? நாம் பலருக்கு ஆபத்தை விளைவிக்கிறோம். நம்மால் பலர் ஆபத்தில் சிக்குகிறார்கள்.
இது எந்த வகையில் நியாயம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருவரும் நேருக்கு நேர் தாக்கிக் கொள்வதில்லை என்பது மட்டும்தான் உண்மை.
ஆனால் ஒவ்வொரு உடலில் தொற்றிக்கொள்ளும் கொரோனா மூலமாக ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து கொள்கிறோம் என்பது தான் உண்மை.
எனவே கொரோனா வைரஸ் நமது உடலில் தொற்றிக்கொள்ளாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.