நீலகிரி மாவட்டம், உதகை, லவ்டேல் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணி யார் உயர்நிலைப்பள்ளியில், 1999-2000 கல்வியாணடில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
தற்போதைய புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, துவக்கி வைத்தார்.
ஈரோடு, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, சென்னை, பெங்களூரு என தொலைதூர மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் முன்னாள் மாணவ, மாணவியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பங்குத்தந்தை பரிசு வழங்கினார்.
பள்ளிக்கு கணினி, ஜெராக்ஸ் இயந்திரம் உள்பட ஏறக்குறைய ரூ.50,000 மதிப்பிலான பொருட்களை முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வழங் கப்பட்டன.
மாணவர்கள் தங்களது அந்த காலகட்ட பள்ளி நினைவுகளை பற்றி மேடையில் பகிர்ந்தனர். கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்னாள் சக மாணவ, மாணவியர்களுக்கும், வயது முதிர்வால் இயற்கை மரணமடைந்த முன்னாள் ஆசிரியைக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு, குடும்பத்தினருக்கு பாடல் மூலம் ஆறுதல் கூறப்பட்டது.
பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியை சாந்தியும், முன்னாள் மாணவர்களின் சார்பில் கண்ணகியும் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.