தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 7 -ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினமே 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்கிழமை சட்டப்பேரவை கூட்டம் கூடியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே, சட்டசபை சபாநாயகர் பதவிக்கு திமுக சார்பில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்பாவு, துணைத் சபாநாயகர் பதவிக்கு கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி ஆகியோர் பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் மனுதாக்கல் செய்திருந்தனர். சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால், மு. அப்பாவு, கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றித் தோவாகினர்.
இதையடுத்து சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.அப்பாவு இன்று (புதன்கிழமை) காலை பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட மு.அப்பாவுவை அவை முன்னவர் துரைமுருகனும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக அழைத்துச் சென்று பேரவைத் தலைவரின் இருக்கையில் அமர வைத்தனர். அதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை சபாநாயகர் மு.அப்பாவு கவனிக்கத் தொடங்கினார்.
1996 -ஆம் ஆண்டு முதல் ராதாபுரம் தொகுதியில் தொடர் வெற்றியை கண்ட அப்பாவு, 2016 -ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார். 2021ம் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தற்போது சபாநாயகராக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது